அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 3
அமெரிக்கா எனப்படும் இந்தக் கண்டத்தில் யு.எஸ். மட்டுமே கனவுப் பிரதேசமாக இருந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை நான் இங்கே வருவேன் எனக் கனவு கூடக் கண்டதில்லை. முதன்முதல் யு.எஸ். பத்தி நான் படிச்ச நாவல் "Gone with the Wind" தான். எழுதியது மார்கரெட் மிட்செல்?
படமாகக் கூடவந்தது. அதிலேதான் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு யுத்தம் பற்றிய தகவல்களை முதன்முதலாக அறிந்து கொண்டேன். நான் இந்தக் கதையைப் படிக்கும்போது திருமணம் ஆகி 3 வருஷம் ஆகிவிட்டதால் இந்தக் கதாநாயகியின் போக்கும், அவளின் காதலர்களை மாற்றிக் கொள்ளும் பாங்கும் அதிர்ச்சியை அளித்தது என்னவோ நிஜம். இருந்தாலும் கதை என்னைக் கவர்ந்தது, முதன்முதலாக "யாங்கி" என்னும் வார்த்தையையும் அறிந்து கொண்டது இந்தக் கதை மூலம்தான். இதற்குப் பின்னர்தான் அமெரிக்கா பத்தி அதிகம் அறிய முயற்சியும் ஓரளவு செய்தேன்.இந்தக் கண்டத்தில் முதன்முதல் குடியேற்றம் நடந்தது கிட்டத் தட்ட 50,000 வருஷங்களுக்கு முன்னர் என்று ஒரு ஆய்வும், அதற்கு முன்னரே இங்கே மனிதர்கள் வசித்ததாய் இன்னொரு ஆய்வும் கூறுகின்றன. யுரேசியர்கள் எனப்படும் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற ஆரம்பித்தது 12,000 வருஷங்களுக்கு முன்னர் இவர்களைத் தான் அமெரிக்காவின் "பூர்வகுடிகள்" எனச் சொல்கிறார்கள். விவசாயம் அந்தக் கால கட்டத்திலேயே செழிப்பாக இருந்து வந்திருக்கிறது.
கட்டடக் கலையிலும் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். சைபீரியாவில் இருந்து வந்த யுரேசியர்கள் "Bering Strait"-ல் இருந்த தரைப் பாலத்தைக் கடந்து வந்ததாகச் சொல்கிறார்கள். ஹவாய்த் தீவில் இருந்தும் வந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. இவர்கள் அனைவரும் கலந்துதான் அமெரிக்கன் இந்தியர்கள் ஏற்பட்டதாய்ச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலம்பஸ் வந்தபோது இவர்கள் தான் இருந்தனர்.
ஸ்பெயின் நாட்டு அரசியின் உதவியோடு புதிய நாட்டைக் கண்டறிய வந்த கொலம்பஸ் கண்டது ஹவாய்தீவையும், தற்போது வெஸ்ட் இன்டீஸ் என அழைக்கப் படும் நாட்டையும்தான் என்றும் சிலர் கூறுகிறார்கள். 1492-ம் ஆண்டில் கொலம்பஸ் இந்தக் கண்டத்தைக் கண்டறிந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் 1498 வரை மெயின் லாண்ட் எனப்படும் உள்நாட்டைக் கண்டறியவில்லை. கொலம்பஸுக்கு முன்னாலேயே பலர் முயன்றாலும் இப்படி ஒரு கண்டம் இருப்பதை உலகுக்கு அறிவித்த முதல் நபர் கொலம்பஸ்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரோ இந்த நாட்டை "இந்தியா" எனவே நினைத்தார். அப்போது மேலை நாடுகளின் கனவு நாடாக செல்வச் செழிப்புடன் இருந்த இந்தியாவை அடைவது அவர்களின் நோக்கமாக இருந்து வந்தது. 1506-ல் இறந்த கொலம்பஸ் தான் கண்டறிந்த இந்த நாடு தனக்குப் பின்னர் இந்தக் கண்டத்துக்கு வந்த நபரான "Amerigo Verspucci" பெயரால் இந்த நாடு அழைக்கப் படுவதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்பதற்கு இதை இந்தியா என நம்பியதுதான் காரணம் எனவும் சொல்லப் படுகிறது.
1875-ல்"Jules Marcow" அவருக்குப் பின்னர் வந்த கதாசிரியர் "Jan Carew" இருவரும் அமெரிக்கா என்ற பெயர் நிகாரகுவவின் ஒரு நகரமான "Ammerique" எடுக்கப் பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார்கள். தங்கத்திற்கு, அதிலும் சுத்தத் தங்கத்திற்குப் பேர் போன அந்த நகரத்திற்குக் கொலம்பஸ் மட்டுமின்றி "Vespucci" விஜயம் செய்தார். Marcow சொல்கிறார், இந்தப் பேரை "Vespucci" புதிய உலகிற்குச் சூட்டியதல்லாமல் தன் பெயரையும் "Alberigo" என்பதிலிருந்து "Amerigo" என மாற்றிக் கொண்டதாயும் குறிப்பிடுகிறார்.
(இன்னும் வரும்)
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















