தாயென்று கும்பிடடி பாப்பா
- ஜாம்பவான்
இணையப் பாட்டி
"என்ன நீ பெரிய ஜாம்பவனாக்கம். ரொம்ப ஸ்டைல் போடாதே." என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆமாம் யார் இந்த ஜாம்பவான்? ராமாயணத்திலும் இந்த ஜாம்பவான் வருகிறார், அதாவது த்ரேதா யுகத்திலும் வருகிறார், அதே போஒல் கிருஷ்ண பகவான் பிறந்த துவாபர யுகத்திலும் இவர் வருகிறார், பெயரும் மாறவில்லை, அதே ஜாம்பவான் தான்.
பிரும்மாவுக்குத் தம் படைப்புத் தொழிலை விடாமல் செய்து வர மனதில் ஓரு ஏக்கம் தோன்றியது.
"இப்படி விடாமல் இந்த வேலையைச் செய்து வருகிறோமே, நமக்கு அந்தப் பரமனை நினைக்கக் கூட நேரமில்லையே, இதற்கு என்ன வழி செய்யலாம்?"
இந்த யோசனையுடன் தான் ஒரு கரடியின் உருவம் கொண்டு பூமியில் வந்து தோன்றினார். ஆரம்பித்தது நாமஸ்மரணை. இடைவிடாமல் கடவுளை நினைப்பது, அவருக்குத் தொண்டு செய்வது, அவர் அழகை ஆராதிப்பது, மனதில் அவரைப் பதிப்பது என்று நாட்களை ஆனந்தமாகக் கழிக்கலானார்.
இதன் நடுவில் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் வாமனராக வந்து மூன்றடி யாசித்து, பின் மூன்றடி அளக்க விசுவரூபம் எடுத்தார். அந்த உருவத்தைக் காணும் பாக்கியம் பெற்ற ஜாம்பவான் தன்னிலை கொள்ளாமல் ஆனந்தம் அடைந்து பேரிகை கொட்டி ஜயகோஷம் எழுப்பி எல்லா திசைகளிலும் பக்திப் பரவசத்துடன் விழாக் கொண்டாடினார். மகிழ்சியால் பகவானை ஏழு தடவை வலம் வந்து விட்டார். இதிலிருந்து எந்த அளவு பகவானின் மேல் அவருக்கு அன்பு இருந்தது என்பது தெரிய வருகிறது.
திரேதாயுகத்தில் சுக்ரீவன் ஜாம்பவானை அமைச்சராக ஆக்கிக்கொண்டான். நீதி வழங்குவதில் மிகச் சிறந்தவரானார். அறிவு, ஆற்றல், உடல் வலிமை, அன்பு என்று எல்லாம் கலந்திருந்த அவரால் சுக்க்ரீவனுக்கு நல்ல ஆலோசனை கூற முடிந்தது.
அனுமாருக்கு இலங்கையைத் தாண்டப் பக்கபலம் அளித்து, அவரது பெருமையை உணர்த்தி, அவரால் இந்தக் காரியம் செய்ய முடியும் என்ற வித்தை விதைத்து, சோர்வை நீக்கி, இலங்கைக்குப் போகும்படி செய்த பெரியவர். இராம இராவண யுத்தத்திலும் பங்கு வகித்தார். இராவணனின் மகனான இந்தரஜித் மாயையினால் அனைவரையும் கட்ட, ஜாம்பவான் இதனால் பாதிக்கப் படவேயில்லை. ஜாம்பவானின் ஒரு குத்தினால் மேகநாதன் மூர்ச்சையடைந்தான்.
அவர் மனதில் ஸ்ரீராமர் என்றும் நிலைத்திருக்க ஆசைப்பட்டதால் ஸ்ரீராமர் அவர் எண்ண ஓட்டங்களைத் தெரிந்து கொண்டு, "ஜாம்பவான் நீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் எப்போதும் இருப்பேன். இதன் பிறகு வரும் துவாபர யுகத்திலும் நான் நேருக்கு நேராகக் காட்சி அளிப்பேன்" என்று வாக்குறுதியளித்தார்.
மல் யுத்தம், துவந்த யுத்தம் செய்வதிலேயே மிக வல்லவர் இவர். இவருக்குப் போட்டியாக யார் மல் யுத்தம் செய்ய முடியும் அந்தப் பரமாத்மாவைத் தவிர? அவர் எண்ணத்தை அறிந்து கொண்ட பரமன் அதற்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தார்.
துவாபரயுகத்தில் யதுகுல கிருஷ்ணனாகப் பரமன் தோன்றினார்.
யாதவ குலத்தில் ஸத்ராஜித் என்பவர் சூரியனை வழிப்பட்டு வந்தார், சூரிய பகவானும் அவரது பக்தியில் மகிழ்ந்து ஒப்பற்ற இரத்தினமான ஸ்யந்தக மணியை அளித்தார். கண்ணன் அங்கு வந்து அந்த மணியைக் கண்டார்.
"ஸத்ராஜித், நீங்கள் இந்த மணியை உக்ரசேன மன்னருக்கு அளித்துவிடு"
"அப்படியே, செய்கிறேன் கிருஷ்ணா"
ஆனால் சொன்னபடி அந்த ஸ்யமந்தக மணியை அவர் கொடுத்தாரா? அதுதான் இல்லை. ஆசை யாரை விட்டது? அதைத் தன்னிடமே வைத்துக்கொண்டார்.
சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன் அதை ஆசையாகத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு வேட்டைக்குச் சென்றான். காட்டில் ஒரு சிங்கம் அவனைத் துரத்திக் கொன்றது, ஆனால் அவன் கழுத்தில் இருந்த மணியை எடுத்துக்கொண்டு ஒரு குகையில் சென்றது. அங்கு இருந்த ஜாம்பவான் சிங்கத்தைக் கொன்று அந்த ஒளிவீசும் மணியைத் தன் வளர்ப்பு மகளுக்கு அணிந்துகொள்ள அளித்தார்.
அங்கு அண்ணன் தன் சகோதரன் இன்னும் திரும்பவில்லையே என்று கவலைகொண்டு தேடினார். பின் அவர் மனதில் கிருஷ்ணன் மேல் சந்தேகம் வந்தது. ஒருக்கால் ஸ்யமந்தக மணிக்காக கிருஷ்ணன் தன் சகோதரனைக் கொன்றிருப்பாரோ? இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் பிரசேனன் வரவில்லையே"
சகோதரப்பாசம் கண்ணை மறைக்க கண்ணனைப் பற்றிப் பழி கூறலானார். கண்ணனே சகோதரனைக் கொன்றான் என்ற பழி தீப்போல் பரவியது. கண்ணன் காதிலும் இது எட்ட தன் பழியைப்போக்க பிரசேனனைத்தேடி கிளம்பினார். பிரசேனனின் குதிரை காட்டில் இறந்து கிடந்தது. அதன் கால் சுவட்டைப்பின் பற்றி ஜாம்பவான் இருக்கும் குகையை அடைந்தார்.
ஜாம்பவதி, ஜாம்பவானின் வளர்ப்பு மகள், திடீரென்று கிருஷணனைக் கண்டு பயத்துடன் கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு ஜாம்பவான் வெளியே வந்தார். கண்ணன் ஜாம்பவதி கழுத்தில் இருக்கும் மணியைக் கேட்டார். அதைத்தர மனமில்லாமல் சண்டை ஆரம்பித்தது. ஜாம்பவான் முன்பு விரும்பிய மல் யுத்தம் தான். 27 நாட்கள் விடாமல் இரவு பகலாக நடந்தது. குத்துக்கள் சராமாரியாக இருவர் மேலும் விழுந்தன. நாட்கள் ஓட ஜாம்பவான் பலம் குறைந்து களைத்துபோனார். தனக்கு இதுபோல் வந்தது இதுவே முதல் தடவை. சோர்வே உணராத அவருக்கு சோர்வு வர அவருடன் மல்யுத்தம் செய்தது சாதாரணமான ஆளாக இருக்க முடியாது, அவர் பரமனாகத்தான் இருக்க முடியும் என்றும் உணர்ந்தார் என் தெய்வம் ஸ்ரீ ராமானாகத்தான் இவர் இருக்க முடியும் என்றும் உணர அவர் முன் ஸ்ரீ ராமசந்தர மூர்த்தியாக வில்லுடன் கண்ணன் ராமனாகக்காட்சி அளித்தார்.
ஜாம்பவான் அப்படியே அவர் பாதத்தில் விழுந்தார். ராமானான கண்ணன் அவரைத் தடவிக்கொடுத்தார். அவ்வளவுதான் உடலெல்லாம் சிலிர்க்க கண்களில் நீர் பெருக அங்கு அவர் தன்னையே மறந்தார். பின் தன் மகள் ஜாம்பவதியையும் கண்ணனுக்குப் பரிசாக அளித்தார்.
அவர் பரமனுடன் மலயுத்தம் செய்யும் ஆசையை கண்ணனும் நிறைவேற்றினார்.
இப்போது ஜாம்பவான் என்றால் என்னெல்லாம் திறமை இருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














