தாயென்று கும்பிடடி பாப்பா
- அறுபத்து மூவர் - 20
கீதா சாம்பசிவம்
மயக்கமுற்றுக் கீழே விழுந்த சங்கிலியாரைக் கண்ட பெற்றோர் வேதனை அடைந்தனர். அவர் மயக்கத்தைத் தெளிவித்து அவரை மயக்கத்தின் காரணத்தை விசாரித்தனர். தாம் அருமை, பெருமையோடு வளர்த்து வந்திருக்கும் தம் மகளின் மனதில் தங்களையும் அறியாமல் புகுந்திருக்கும் குறையை அறிய எண்ணினர் பெற்றோர். அவ்வளவில் சங்கிலியாரும், தாம் ஒரு சிவனருட் செல்வரையன்றி வேறொருவரைத் திருமணம் புரிந்து கொள்ள முடியாது எனவும், தக்க அருட்செல்வர் வரும் வரைக்கும் தாம் காத்திருக்கப் போவதாயும், ஒற்றியூர் ஈசனுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டு அவனருளாலே, அவன் தாள் பற்றியே வாழ நினைப்பதாயும், அதற்குப் பெற்றோர் மறுப்புத் தெரிவிக்கக் கூடாது எனவும் வேண்டினார். பெற்றோர் சற்றே கலங்கினார்கள். மனம் போல் மாங்கல்யம் தம் பெண்ணுக்குக் கிடைக்குமா என சந்தேகம் அடைந்தனர். ஆகையால் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தனர். சங்கிலியாரோ வைராக்கியம் இயல்பிலேயே நிரம்பப் பெற்று இருந்தமையால் தம் கொள்கையிலிருந்து சற்றும் வழுவாமல் இருந்தார். ஆனால் இவர் தம் கொள்கை அறியாத செல்வந்தன் ஒருவன் சங்கிலியாரை மணம் முடிக்க எண்ணிப் பெண் கேட்டுத் தூது அனுப்பினான். ஆனால் பெற்றோர் சங்கிலியாரின் கொள்கையைப் பற்றி விளக்கிக் கூறாமல் ஏதேதோ தந்திர வார்த்தைகள் கூறி அவர்களை அனுப்பிவிட்டனர். விதிவசத்தால் சில நாட்களில் அச்செல்வந்தன் இறக்க நேரிட்டது. கேட்க வேண்டுமா சுற்றத்தாரின் ஏளனத்துக்கு? சங்கிலியாருடன் மணம் பேச எண்ணியதாலேயே அவன் இறந்தானோ என்னும்படிக்குச் சந்தேகப் பேய் வேகமாக அனைவரையும் பிடித்து ஆட்டியது. வேறு எவரும் அவரைப் பெண் கேட்டு வரவும் துணியவில்லை. உறவினரும், நண்பர்களும், சுற்றமும் ஒதுங்கியே இருந்தனர்.
மனம் நொந்த பெற்றோர் சங்கிலியாரின் விருப்பத்தையாவது நிறைவேற்ற எண்ணி அவரைத் திருவொற்றியூர்க் கோயிலில் கொண்டு சேர்த்தனர். பெற்றோர் கொஞ்சம் வசதி படைத்தவராயிருந்தமையால் திருவொற்றியூரிலேயே கன்னிமாடம் ஒன்றை அமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தி, தினமும் ஒற்றியூர் ஈசனைத் தொழுது வரவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். எம்பெருமான் நினைவாகவே வாழ்ந்த சங்கிலியாருக்குப் பணிவிடைகள் புரியவும், மலர் வனத்தில் மலர் கொய்து தரவும், மற்றப் பணிகளுக்கும் பணியாட்களையும் நியமித்துக்கொடுத்தனர். மலர்வனத்திற்குச் சேடிப் பெண்களோடு சென்று மலர் கொய்து பெரும் மாலைகள் தொடுத்து ஒவ்வொரு காலத்துக்கும் உரிய வழிபாட்டுக்கு ஏற்ற வண்ணம் பிரித்துக் கொடுப்பார் சங்கிலியார். எந்நேரமும் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்தார். இவ்வாறு சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்த சங்கிலியாரின் வாழ்க்கையில் ஒரு நாள்………
திருத்தல யாத்திரை செய்து வந்த சுந்தரர் திருவொற்றியூருக்குத் தம் தொண்டர் கூட்டத்தோடு சேர்ந்து வந்தார். சிவ மடம் ஒன்றில் தங்கிக்கொண்டு எம்பெருமானைச் சேவித்துக்கொண்டு வந்தார். ஒரு நாள் சங்கிலியார் கோயிலுக்கு வாசமிகு நறுமலர் மாலையை எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு வந்தார். அதே சமயம் சுந்தரரும் ஈசனைத் தொழுத வண்ணம் மண்டபத்தினுள் புகுந்தார். மின்னல் போல் தெரிந்த்து அவர்கண்களுக்கு. அவ்வளவு விரைவில் மாலையைக் கொடுத்த சங்கிலியார் விரைவில் அங்கிருந்து மறைந்தார். ஒரு கண நேரமே பார்க்க முடிந்த அந்த அழகுப் பெட்டகத்தை மீண்டும் மீண்டும் தம் கண்ணாரக் காண முடியுமா என்ற எண்ணம் சுந்தரர் மனதிலே தோன்றியது. “யாரிவள்? இத்தனை நாட்கள் பார்த்தது இல்லையே? இத்தனை ஒளி பொருந்திய முகத்தோடு கூடிய இந்தக் கன்னிகை! கன்னிகை தானே இவள்? ஆம், ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். கன்னி மாடத்தினுள் அல்லவோ சென்றாள்? நிலவைப் போன்ற குளுமையான ஒளி பொருந்திய முகமும், விண்மீன்களைத் தோற்கடிக்கும் சுடர் விடும் கண்களும், முத்துக்களைப் பழிக்கும் வெண்பற்களும், அன்றலர்ந்த மலர் போன்ற புன்னகையால் விகசித்த திருமுகமும் கொண்டு விளங்கும் இந்தப் பெண் யாரோ, எந்த ஊரோ? என்ன பெயரோ? சுந்தரர் தவித்தார். தண்ணீராய் உருகினார். கமலினியோ பரவை நாச்சியாராகப் பிறந்து ஏற்கெனவே சுந்தரரைத் திருமணம் செய்து கொண்டாயிற்று. அநிந்திதையும் சுந்தரர் மேல் ஆசை கொண்டவள் தானே? அவளுக்கும் திருமண வேளை வந்துவிட்டது. ஆனால் இப்பிறவியில் இவை எதுவும் எவருக்கும் நினைவில் இல்லை. பரவையை விடுத்து இன்னொரு பெண்மேல் தனக்கு இவ்வளவு ஆசை தோன்றும் என்பதைச் சுந்தரர் எண்ணிப் பார்த்தவரும் அல்ல.
அக்கம்பக்கம் விசாரித்து சங்கிலியாரின் பெற்றோர் பற்றியும் சங்கிலியார் சிவனருட் செல்வர் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடே கன்னிமாடத்தில் தங்கி இருப்பதையும் அவர் தம் சிவத் தொண்டையும் பற்றிக் கேட்டறிந்தார். ஆஹா, இந்தப் பெண்ணை எவ்வாறேனும் அடைந்தே தீர வேண்டும்! என்னும் எண்ணம் வலுத்தது சுந்தரருக்கு. எம்பெருமானிடம் வேண்டிக்கொண்டார். “பெருமானே, உன் திருவடிகளே கதி என்றிருக்கும் என்னுடைய உறுதி தளர்ந்து போகும் வண்ணம் செய்த இந்தப் பெண்ணை எவ்வாறேனும் நானே மணமுடிக்க நீவிர் உதவி செய்யவேண்டும். என் உள்ளத்தில் மாறாக் காதலைத் தோற்றுவித்து விட்டாள் இந்தப் பெண்ணரங்கு. இவளைப் பார்த்த்திலிருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. எவ்வாறேனும் எனக்கு உதவி செய்து என்னைக் காத்தருளும்!” என்று சுந்தரர் வேண்டினார்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














