தாயென்று கும்பிடடி பாப்பா
- கோபமே என்னிடம் வராதே
இணையப் பாட்டி
கோபம் என்பது மிகக்கொடியது. கோபம் உடலுக்கும் தீங்கு விளைக்கிறது. ஆனாலும் எல்லோரையும் கோபம் வளைத்துப் போடுகிறது அதிலிருந்து மீள முடியவில்லை. கோபம் வரும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு நழுவி விட வேண்டும் அல்லது ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இல்லையென்றால் இரண்டு முட்டிகளும் மடக்கி ராமநாமம் அல்லது சிவநாமம் சொன்னாலும் கோபம் குறைந்துவிடும். கோபமே வாராத ஒருவர் இருந்தார் என்றால் அவர் ஏக நாதர்தான். பொறுமைக்கு ஏகநாதர் என்றும் சொல்லலாம். இவரைப்பற்றி ஸ்வாமி கமலாத்மா ஜி எழுதிய ஒரு கதையைப் படித்தேன். அதை இங்கு நினைவு கொள்ளுகிறேன்.
மஹாராஷ்ராவில் உதித்த ஏகநாதருக்குக் கோபமே வந்தது கிடையாது, எப்போதும் சாந்தமாகவே இருப்பார். கோபம் வராத அதிசய மனிதர் என்றும் சொல்லலாம். இதனால் அவர் மேல் பிரியம் கொண்டு அவரை ஆதரித்தவர்கள் அதிகமானார்கள். இதனால் சில பொறாமை பிடித்த மனிதர்கள், தீய எண்ணத்துடன் அவரை எப்படியாவது கோபம் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற தீவிரமான உத்தேசத்துடன் ஒரு அறிவிப்பு விட்டனர்
"யார் ஏகநாதருக்குக் கோபம் கொள்ளச் செய்கிறார்களோ அவருக்கு இருநூறு ரூபாய் பரிசாகத் தரப்படும்."
இந்தப் பிரச்சாரம் கேட்டும் ஒருவரும் முன்னுக்கு வரவில்லை. எல்லோருக்கும் ஏகநாதர் என்றால் ரொம்பப் பிரியம் தான். பண ஆசை காரணமாக அந்த இழிவான செயலை ஒருவரும் ஏற்க விரும்பவில்லை.
கடைசியாக ஒரு இளைஞன் தான் இதைச் செய்ய விரும்புவதாக அறிவித்துக்கொண்டு அங்கு வந்தான். ஏகநாதர் வீட்டையும் அடைந்தான். ஏகநாதர் வழக்கம் போல் பூஜை செய்து கொண்டிருந்தார். வந்தவனோ கை கால்களை அலம்பாமல் பூஜை அறைக்குச் சென்றான்.
ஒரு நிமிடம் நின்று பார்த்தான். பின் திடீரென்று அவர் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். இதனால் பூஜையின் நடுவே தடங்கல் வந்த காரணத்திற்காக ஏக நாதர் கோபிப்பார் என்று நினைத்தான். ஆனால் ஏகநாதரோ கோபமே அடையவில்லை.
அதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ந்து போனார். "ஆஹா என்ன உன் பக்தி! நான் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். யாரும் உன்னைப் போல் என் மடியில் அமர்ந்ததில்லை. என்ன அன்பு உன்னிடம்! உன் அன்பே விநோதமானது."
இளைஞனுக்கு ரொம்ப ஏமாற்றம். ஒன்றும் சொல்ல முடியாமல் அசட்டுச்சிரிப்பு சிரித்தான்.
ஆனாலும் அந்த ரூபாய் ஆசை யாரை விட்டது? இன்னொரு முறை முயற்சி செய்யத் திட்டம் போடலானான். பூஜை முடிந்து உணவுக்கு இலைகள் போடப்பட்டன. அந்த இளைஞனுக்கும் ஒரு இலை இருந்தது. ஏகநாதரின் மனைவி கிரிஜாபாய் அன்புடன் பரிமாறினாள்.
கீழே குனிந்து அன்னம் வைத்துப் பின் நெய் விட இலைப்பக்கம் குனிந்தாள். அப்போது அந்த இளைஞன் தக்கென்று கிரிஜாபாயின் முதுகின் மீது ஏறிக்கொண்டான். இந்த நிலையில் எந்தக் கணவருக்குத்தான் கோபம் வராது? ஆனால் ஏகநாதருக்குக் கோபம் வரவில்லை!
அமைதியாக இருந்து, "கிரிஜா ஜாக்கிரதை, அந்தப் பையன் கீழே விழுந்து விடாமல் பார்த்துக்கொள்."
"இல்லை நாதா, பயப்படாதீர்கள், நான் என் குழந்தை ஹரியைச் சுமந்து வேலைகள் செய்து பழக்கம். இந்தக் குழந்தையைக்கீழே போடுவேனா?"
இளைஞனுக்கு மனதில் ஒரு மாற்றம். அமைதியான தம்பதிகளைக் கண்டான். மனம் தன் செய்கைகாக வருந்தியது. இருநூறு ரூபாய் மனதிலிருந்து மறைந்தது. தன் செய்கைக்காக வெட்கமடைந்து முதுகிலிருந்து கீழே குதித்து ஏகநாதரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.
அன்பாலேயே கெட்டவனையும் மாற்ற முடியும்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














