Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
   
    என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தியாகையரின் பக்தி
தமிழ்த்தேனீ

 
பக்தி என்றாலே நம் கண் முன் வரும் தோற்றங்களுள் முதன்மையானது கையில் தம்பூருடன் கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன் ஆன்மாவையே உருக்கும் தோற்றம் கொண்ட இருக்கும் தியாகைய்யர் என்கிற தியாகராஜன் என்கிற தியாகப் ப்ரும்மம்தான், அவர் வீட்டு வாயில் திண்ணையில் அவர் அமர்ந்திருக்கிறார். நாம் அந்த மகானை தரிசிக்க அவர் வீடு நோக்கி செல்கிறோம். நாம் நெருங்க நெருங்க அவர் பாடும் ராமநாமம், தம்பூரின் ஒலி நயத்தோடு நம் காதுகளில் கேட்க ஆரம்பிக்கிறது.

சதா ராம நாமத்தில் மூழ்கியிருக்கும் அவர் அப்போதும் ராம நாமாமிருதத்தில், ஸ்ரீ ராமனுடைய குண விசேஷங்களில் மனதை ஆழ்த்தி ராம நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கியிருக்கிறார், அந்த இடமே கறவைகள், கன்றுகள் முதற்கொண்டு உருகி நிற்கின்றன, மரங்கள் செடிகள்கூட இதமான தென்றலில் இளமையாக ஆடுகின்றன, அந்த மோனத்தவத்தில் அவர் மூழ்கியிருக்கும்போது அந்த மோனத்தவத்தைக் கலைக்கும் வலிமை யாருக்குமே கிடையாது. அப்படி அவர் ஆழ்ந்த பக்தியில் திளைத்திருக்கும்போது அன்று ஏனோ தெரியவில்லை இடையிடையே சிறு சலனம் மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது, ஆம் அவர் ஆழ் மனத்தையும் மீறி சலங்கை ஒலி, பொற்சதங்கை ஒலி அவரின் ராம நாம சங்கீர்த்தனத்திற்கு மெருகூட்டியது.

ஒரு நாள், மறு நாள், அதற்கும் மறு நாள், அதே நேரத்துக்கு கடந்த மூன்று நாட்களாக அவருக்கும் அந்த பொற்சதங்கை ஒலி பழகியிருந்தது, மறுநாள் அவரின் ராம நாம சங்கீர்த்தனத்தை தொடங்கும் போதே அந்த சலங்கை ஒலிக்காக அவரே காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் அவருள் விளைந்தது. கண்களை மூடி, ஸ்ரீ ராமனின் தோற்றத்தையே மனதில் நிறுத்தி நாம் சங்கீர்த்தனம் செய்யும் அவர் மனதும் கண்களும் விழித்துக்கொண்டன. அங்கே அவர் கண்ட காட்சி, உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று ஈடுபட்ட ஆழ்வாரைப் போல ராம நாமத்தில் மூழ்கியிருந்த தியாகையர் கண்களில் முதல் பட்டது இரு செந்தாமரை இதழ்கள், அல்ல அல்ல இரு திருவடிகள், செம்பஞ்சுக்கு குழம்பு பூசி தங்க்க் கொலுசுகள் மின்ன தகதகத்த பாதங்கள், அந்தப் பாதங்கள் நகர நகர அந்தப் பாதங்களின் பின்னாலேயே தியாகையரின் மனதும் செல்ல அந்த திருவடிகள் இரண்டும் மெல்லடி நடந்து தியாகையரின் வீட்டினுள்ளே சென்றது.

தியாகையரின் கண்களில் கண்ணீர்? இது என்ன ஆனந்தக் கண்ணீரா? விரஜா நதியில் குளித்தது போல் உடல் லேசாகி ஆனந்த்த்தில் மிதந்தது. சில வினாடிகள் அப்படியே அந்த திருவடிகளில் லையித்திருந்த தியாகைய்யர் நினைவுக்கு மீண்டு தன் வீட்டுக்குள் நுழைந்த அந்தத் திருவடிகளை மீண்டும் காண வேண்டும் என்னும் ஆசையால், அந்த செந்தாமரைப் பாதங்களுக்கு, திருவடிகளுக்கு சொந்தக்காரி யார் என்று அறியும் ஆவல் மிஞ்ச தன் வீட்டிற்குள்ளேயே ஒரு அன்னியனைப் போன்ற உணர்வுடன் நுழைந்தார். அங்கே.. அங்கே அவரின் மனைவி கமலா! தூணில் சாய்ந்த படி கண்கள் திறந்தபடி, எங்கோ பார்த்தபடி தன் நிலை மறந்து உட்கார்ந்திருந்தாள், ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தாள், அவள் தவத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் தியாகையர், கணவனைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்யும் அந்த உத்தமப் பெண்மணி தான் வந்ததையும் கவனிக்காமல் இருக்கிறாள் எப்படி? தனக்கும் மேலான அப்படி ஒரு சொர்க நிலையை அவள் அடைந்திருக்கிறாள், அப்படி ஒரு ஆனந்தமயமான ஆழ் நிலையை அவள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கண்டு அவர் மனம் பெருமித்த்தால் விம்மியது, எப்படிப்பட்ட பெண்மணி இவள்? இவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்திருக்கிறோம் நாம் என்று பரவசமடைந்தார் தியாகையர்.

திடீரென்று தன் சுய நிலைக்கு திரும்பிய கமலா திடுக்கிட்டு எழுந்திருக்க அவளை எழுந்திருக்க விடாமல் இதமாக அப்படியே உட்காரவைத்து தானும் அவளருகே உட்கார்ந்து அவளைப் பரிவோடு பார்த்து, கமலா என்று அன்போடு அழைத்தார் தியாகையர். கமலா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், நானும் சில நாட்களாக கவனித்துக்கொண்டே இருக்கிறேன், பொற்சதங்கை அணிந்த இரு திருப்பாதங்கள் தினமும் நம் வீட்டிற்கு வரக் காண்கின்றேன், அந்த செந்தாமரைப் பாதங்களைப் பார்த்தவுடன் என் மனமும் அப்படியே மயங்குகிறது, அந்த்த் திருவடிகளுக்கு உரிய பெண்மணி யார் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு கமலா தினமும் அந்தப் பெண் இங்கே வருகிறாள், என் எதிரே அமர்கிறாள், ஏதோ பேசுகிறாள், அவள் வந்துவிட்டால் நான் என்னையே மறந்துவிடுகிறேன். அவள் கண்களைப் பார்த்துவிட்டால் போதும், அப்புறம் இந்த உலகமே மறந்து போய்விடுகிறது, அப்பா..!! அந்தக் கண்கள்! எத்தனை விசாலம், எவ்வளவு ஆழமான அழகான கருணையோடு இருக்கும் கண்கள்! அந்தக் கண்களைப் பார்த்துவிட்டால் பார்த்துக்கொண்டே இருக்கிறேன், பசி தாகம் எதுவுமே தெரிவதில்லை, நீங்கள் யாரம்மா என்று கேட்க வேண்டும் என்று தினமும் நினைக்கிறேன், ஆனால் என்னால் முடியவே இல்லை, ஆமாம் யார் அந்தப் பெண்மணி? என்றாள் கமலா அவள் யார்..?

ஒரு கணத்தில் தியாகைய்யருக்கு உடம்பு சிலிர்க்கிறது.. அவள் யார் என்று அவருக்கு புரிந்துவிட்டது! திரும்பிப் பார்த்தவுடன் தன் குஞ்சுகளின் பசியை தன் பார்வையாலேயே போக்கும் மீனைப் போன்றவள் அவள்! அவள்தான் மின்னாக்‌ஷி, அவள்தான் பராசக்தி, இதுவரை நான் அவளைப் பற்றிப் பாடவே இல்லையே! அதை நினைவூட்டவே அவள் இங்கே வந்திருக்கிறாள், அது மட்டுமல்ல என் பிரிய சகியே, அவள் உனக்கு மட்டும் எதற்காக தரிசனம் தந்தாள் தெரியுமா? மஹா பதிவிரதையான உனக்கு மோட்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கவே அவள் கருணையோடு இங்கே வந்தாள்! நான் அவளைக் கண்டு கொண்டேன்! என் தேவியை நான் தெரிந்து கொண்டேன், என்றவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது! பக்திப் பரவசமாய்ப் பாட ஆரம்பித்தார் ”தாரிணி தெலுசு கொண்டி த்ரிபுரசுந்தரி” என்று அமிர்த வர்ஷமாக இன்றும் அவருடைய க்ருதி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சுபம்

செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு அம்மன் தரிசனம் என்னும் பத்திரிகைக்காக என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களால் எழுதப்பட்ட்து

அன்புடன்
தமிழ்த்தேனீ



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants