-
கிருஷ்ணா முகுந்தா - 05
- கீதா சாம்பசிவம்
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதில் யாதவர்கள் என்பவர்கள் யார் என்பதும், ஆரிய வர்த்தம் என்று சொல்லப் படுவது பற்றியும், ஆரியர்கள் பற்றியுமே. ஆரியர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே இன்று சுட்டிக் காட்டுவது போல் உண்மையில் இருந்தது இல்லை. இமயத்துக்குத் தெற்கே, விந்தியத்துக்கு வடக்கே உள்ள சில பகுதிகளே ஆரிய வர்த்தம் என்று அழைக்கப் பட்டது. கிழக்கே உள்ள பகுதி அந்தக் கால கட்டத்திலும் மகதமாகவே இருந்திருக்கின்றது. ஆரியர்கள் பாரத தேசம் பூராவும் பரந்து இருந்திருக்கின்றார்கள். தென்பகுதியை பரத கண்டம் என்றும் திரவிடம் என்றும் அழைக்கப் பட்டு வந்திருக்கின்றது. அவர்கள் நாகர்கள் என அழைக்கப் பட்ட மற்றொரு இனத்தவரோடும், ரத்த சம்மந்தமான உறவுகள் பூண்டு இருந்திருக்கின்றனர். என்றாலும் ஆரியர்கள் எனத் தனித்துச் சொல்லப் படுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்த தர்மம் ஒன்றே ஆகும். எந்தச் சூழ்நிலையிலும் தர்மத்தின் பாதையில் இருந்து சற்றும் வழுவாமல் இருந்து வந்தார்கள். அவர்களின் வாழ்க்கை முறையில் சத்தியம், யக்ஞம், தவம் போன்றவைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வந்தது. உண்மைக்கும், தியாகத்துக்கும், புனிதத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வந்தது. இந்த ஆரியர்களில் ஒரு பிரிவினரே யாதவர்களும் ஆவார்கள். எவ்வாறு எனச் சற்று விளக்கமாய்ப் பார்ப்போமா?
யயாதி மன்னனின் மூத்த மனைவியும், சுக்ராசாரியாரின் மகளும் ஆன தேவயானிக்குப் பிறந்த பையன் தான் யது என்னும் ராஜகுமாரனும், துர்வாசு என்பவனும் ஆவார்கள். இந்த யதுவின் வம்சமே யாதவர்கள் என அழைக்கப் பட்டனர். யாதவர்களில் பல பிரிவுகள் இருந்து வந்தன. அவற்றில் சில குக்குரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சத்வதர்கள், போஜர்கள், மாதவர்கள், ஷூரர்கள் என்று இருந்த அனைத்துப் பிரிவுகளையும் மொத்தமாய் வ்ருஷ்ணி சங்கமம் எனச் சொல்லுவதும் உண்டு. யாதவர்கள் தங்கள் கடமைகளில் சிறந்து விளங்கியதோடு மட்டுமில்லாமல், சிறந்த வீரர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களில் அந்தக் கால கட்டத்திலேயே நேரிடையாக அரசன் என ஒருவரை மட்டும் சொல்லாமல் ஜனநாயக முறையே இருந்து வந்தது. என்றாலும் ஒரு தலைவன் வேண்டுமே என்பதற்காக, ஒவ்வொரு பிரிவினரும் தங்களில் மிகச் சிறந்தவரை, வீரரை, செல்வமும், படை பலமும் பெற்றவரை அரசர் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்தது.
மற்றச் சில ஆரிய அரசர்களின் நாடு விஸ்தரிப்பால் யாதவர்கள் தென் பகுதியை நோக்கி வர ஆரம்பித்தனர். கங்கையைக் கடந்து யமுனைக்கரையில் மது என்ற அரக்கனால் நிர்வகிக்கப் பட்ட இந்த மதுவனம் ஆனது காடுகள் அழிக்கப் பட்டு யமுனைக்கரையில் ஒரு நகரத்தையும் மது என்னும் அரக்கனால் நிர்மாணிக்கப் பட்ட இடம் ஆகும். இந்தக் கதை நடந்த துவாபர யுகத்துக்கு முன்னே நடந்த த்ரேதா யுகத்தில் அயோத்தியை ஆண்ட ஸ்ரீராமச்சந்திரனின் தம்பியான ஷத்ருகனனால் மதுவனத்து அரக்கர்களின் கொடுமை தாங்காமல் மதுவனம் அழிக்கப் பட்டு நாடு பூராவும் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கொண்டுவரப் பட்டது. இதன் பின்னர் வந்த யாதவர்கள் கங்கையைத் தாண்டி, வந்து வ்ரஜபூமி என அழைக்கப் பட்ட மதுராவுக்கும் அப்பால் தங்கள் ராஜ்யத்தையையும் ஆளுமையையும் விரிவாக்கினார்கள். ஷூரர்கள் இனத்தின் முக்கியத்துவமும் பலமும் வாய்ந்த அரசன் நாகர் இனத்தைச் சேர்ந்த இளவரசியை மணந்து கொண்டான். அவனுக்குப் பிறந்த பிள்ளைகளே வசுதேவன் என்பவரும், தேவபாகரும் ஆவார்கள். இவர்களுக்கு ஐந்து சகோதரிகளும் உண்டு. அவர்களில் மூத்தவளை ப்ரீத்தா எனவும், இளையவளை ஷ்ருதஷ்ரவா எனவும் அழைத்தனர். மூத்தவள் ஆன ப்ரீத்தாவை அவள் தந்தையான ஷூரன் குந்திபோஜனுக்குத் தத்துக் கொடுத்தான். அந்தப் பெண்ணுக்குக் குந்தி எனவும் பெயர் மாற்றம் செய்யப் பட்டு குந்தி அங்கே வளர்ந்து வந்தாள். அந்தகர்களில் முக்கியம் ஆன உக்ரசேன அரசனுக்கு கம்சன் என ஒரு மகன் இருந்தான். அந்தக் கம்சன் சிறு வயது முதலே எதற்கும் அஞ்சாமலும், மிகவும் முரட்டுத் தனத்தோடும் இருந்து வந்தான். ஆரியர்களின் குணம் ஆன பணிந்து போதல், ஆச்சாரியர்களை மதித்தல், உண்மை பேசுதல் போன்ற குணங்களை அறவே வெறுத்ததோடு அல்லாமல் தன் தந்தையான உக்ரசேனரையும் மதிக்காமல் இருந்தான்.
இந்தக் கம்சன் மகத நாட்டு அரசனும், அந்தக் காலத்தில் சக்கரவர்த்தி என அறியப் பட்டவனும் ஆன ஜராசந்தனின் இரு மகள்களையும் திருமணம் செய்து கொண்டு யாதவர்களின் ஜென்மப் பகைவன் ஆன மகத அரசனைத் தனக்கு உறவாக்கிக் கொண்டான். இந்தத் திருமணத்தின் மூலம் ஜராசந்தனின் உதவி தனக்குக் கிட்டும் என்பதோடு அல்லாமல் அனைத்து யாதவர்களையும் அடக்கவும், தான் ஒருவனே யாதவ குலத் தலைவனாய் இருக்கவும் ஜராசந்தன் உதவுவான் என்ற எண்ணமே காரணம் ஆகும். ஜராசந்தனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய வீரனாகவும், அதே சமயம் பிரியத்துக்கு உகந்த மருமகனாகவும் இருந்து வந்தான் கம்சன். தன் சொந்த இனத்தையே அழிக்கவும் ஜராசந்தனுக்கு உதவியும் புரிந்து வந்தான்.
உக்ரசேனனின் தம்பியான தேவகனுக்கு தேவகி என்றொரு மகள் இருந்தாள். ஷூரனின் மகன் ஆன வசுதேவனுக்கு தேவகன் மகள் ஆன தேவகியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. வசுதேவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி ரோகிணி என்றொரு மனைவி இருந்தாள். என்றாலும் அரசியல் காரணங்களுக்காகவும், அரசர்களும், தலைவர்களும் எப்போதும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலும், வாரிசுகள் விருத்திக்காகவும் இவ்வாறு இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்ளுவது அந்தக் காலத்தில் சகஜமாய் இருந்து வந்திருக்கின்றது. வசுதேவரின் ஐந்து சகோதரிகளில் மூத்தவள் ஆன குந்தியைக் குந்தி போஜனுக்குத் தத்துக் கொடுத்திருந்தார்கள் அல்லவா? அந்தப் பெண்ணை ஹஸ்தினாபுரத்தின் மன்னன் ஆன பாண்டுவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் பட்டிருந்தது. அந்தப் பெண்ணிற்கு மூன்று குழந்தைகளும், அவளின் இளையாள் ஆன மாத்ரிக்கு இரு பையன்களும் இருந்தனர். பாண்டு இறந்ததும், குந்தி தன் குழந்தைகள் மூன்று பேரோடும், தன் இளையாள் ஆன மாத்ரியின் குழந்தைகள் இருவரையும் சேர்த்தே வளர்த்து வந்தாள்.சிந்து நதிக்கரையில் இருந்த சேதி நாட்டு மன்னன் ஆன தாமகோஷனுக்கு வசுதேவரின் மற்றொரு இளைய சகோதரி ஆன ஷ்ரூதஷ்ரவாவைத் திருமணம் செய்து கொடுத்திருந்தது. அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் சிசுபாலன் என்பதாகும். இந்தச் சிசுபாலனுக்குத் தன் தாயின் சொந்த சகோதரன் ஆன வசுதேவரை விடவும் கம்சன் மேலும், ஜராசந்தன் மேலும் அதீதமான பக்தியும், மரியாதையும் உண்டு. அவர்களாலேயே தானும் ஒரு சக்கரவர்த்தி ஆகலாம் என்றும் நினைத்து வந்தான்.
வட மதுரையில் யாதவர்களின் அப்போதைய தலைவன் ஆன உக்ரசேனன் அரசனாய் இருந்து வந்தான். உண்மையில் குடிமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப் படும் இந்த ஜனநாயக முறை அரசியலில் கம்சனுக்கு நம்பிக்கை இல்லை. தன் மாமனாரும் மகத நாட்டின் சக்கரவர்த்தியும் ஆன ஜராசந்தனைப் போல் தானும் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்பதே கம்சனின் கனவு. அதற்காகவே அவன் பெரு முயற்சிகள் எடுத்து வந்தான். மகனின் அரசியல் பிடிக்காமல் உக்ரசேனன் ஒதுங்க, கம்சனின் இஷ்டப் படியே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கிருஷ்ணர் பிறந்த சூழ்நிலையைப் பார்ப்போமா இப்போது? வசுதேவரின் குலம் ஆன ஷூரர்களுக்கும், கம்சனின் குலம் ஆன அந்தகர்களுக்கும் அடிக்கடி ஏதாவது சிறு சிறு மோதல்கள் தொடர்ந்தன. அடிப்படையில் இருவரும் யாதவர்களே என்றாலும், குடும்பச் சண்டைகள் தொடர்ந்தன. ஆகவே இரு குடும்பத் தலைவர்களும் இணைந்து உக்ரசேனனின் தம்பியான தேவகனின் மகள் தேவகியை, ஷூரர்களின் தலைவனாக விளங்கி வந்த வசுதேவருக்குத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயித்து, வேத கோஷங்கள் முழங்க திருமணமும் நடந்து முடிந்தது. திருமணத் தம்பதிகள் இருவரையும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தையும் பார்த்துப் பார்த்து மொத்த யாதவ குலமே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போய் இருந்தார்கள். தம்பதியரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு ரதம் தயார் ஆகிக் கொண்டிருந்தது அப்போது திருமணத்துக்கு வந்த பல ரிஷி, முனிவர்களிலும் தேவலோகத்து ரிஷியான நாரதர் வந்திருந்தது மிகச் சிறப்பாய்க் கருதப் பட்டது. திருமணம் முடிந்ததும், முறைப்படி அப்போது அரசனாய் இருந்த கம்சனைச் சென்று பார்த்தார் நாரதர். கம்சனும் அரசகுலத்தார் கடைப்பிடித்து வந்த முறைகளை ஒட்டி வந்தவரை வரவேற்று உபசரித்தான். அவருடைய ஆசிகளைக் கோரினான்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















